அதான் எங்களுக்குத் தெரியுமே!

March 30, 2008

சமீபத்தில் மும்பை சென்று வந்த வெளிநாட்டுக்காரர் ஒருவர் சொன்னார், “மும்பை கட்டிடங்களில் பாதுகாப்பாக லிஃப்டில் பயணிக்க வேண்டுமெனில், ஒவ்வொரு முறையும் 40 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். ஏனெனில், மும்பையில் சராசரியாக 40 நிமிடங்களுக்கு ஒருமுறை மின்தடை ஏற்படுகிறது. நீங்கள் அதிக பட்சமாக 40 நிமிடங்கள் காத்திருந்து மின்தடை ஏற்பட்டு நீங்கியபின் லிஃப்டில் பயணித்தீர்களென்றால் அடுத்த 40 நிமிடங்களுக்கு லிஃப்டில் சிக்கிக் கொள்ளும் அபாயத்திலிருந்து தப்பலாம்”.

இது உண்மை நிலவரத்தை சற்றே மிகைப்படுத்தி வேடிக்கையாகச் சொல்லப் பட்டதுதான் என்றாலும், இதைச் சொன்னவர் டி-ஷர்ட், அரைக்கால் சட்டை, கழுத்தில் கேமரா சகிதம் இந்தியாவுக்கு வந்துச் சென்ற சுற்றுலாப் பயணி என்றால், அவரது நகைச்சுவையைக் கேட்டு நாமும் சிரித்து விட்டு மறந்து விடலாம். ஆனால், இப்படிச் சொன்னவர், பல நாடுகளில் தொழிற்சாலைகள் அமைத்து நடத்தி வரும் பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் தலைவர்; இந்தியாவிலும் ஒரு தொழில் நிறுவனம் தொடங்கும் திட்டத்தை பரிசீலித்துக் கொண்டிருப்பவர் எனும்போது, அவரது நகைச்சுவைக்கு பின்னே மெலிதான ஒரு கவலையும் ஒளிந்து கொண்டிருப்பது தெரிகிறது.

40 நிமிடங்களுக்கு ஒருமுறை மின்தடை ஏற்படுமெனில் ஒரு தொழிற்சாலையை நடத்துவது எப்படி என்ற கவலை ஏற்படுவது நியாயம்தானே? வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்திழுக்க விரும்பும் இந்தியா கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் இது போல நிறைய இருக்கின்றன.

‘தி எகனாமிஸ்ட்’ இதழ் (மார்ச் 8-14) ‘இந்தியாவின் வளர்ச்சியை தடுப்பது எது?’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது.

‘கடந்த 15 ஆண்டுகளாக இந்தியா வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது. இந்திய நிறுவனங்கள் உலக தரத்திலான நிறுவனங்களுடன் போட்டி போடுகின்றன. மொத்த உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு கணிசமானது’ எனப் புகழும் அக்கட்டுரை, இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை தடுக்கும் காரணிகளையும் பட்டியலிடுகிறது.

‘கம்யூனிஸ்ட்களை நம்பி செயல்படும் அரசு, சாதி முறை, மின் தடைகள், கடுமையான தொழிலாளர் நலச் சட்டங்கள் போன்ற பல காரணிகள் இந்தியப் பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்குகின்றன.

இதையெல்லாம் விட பெரிய முட்டுக்கட்டை, ஊழல் மலிந்த அரசு இயந்திரமே! . அரசு அறிவிக்கும் நலத்திட்டங்களின் பலன்கள் மக்களை சென்றடைய விடாமல் தடுக்கும் தடைக்கல்லாய் இருப்பது இதுதான். இந்த பொதுப்பணித்துறையை சீர்திருத்தாமல் நாட்டு நலனுக்காக அரசு எடுக்கும் முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீராகவே வீணாகிப் போகும்.

பழைய படம் ஒன்றில் நடிகர் தங்கவேலு தன் மனைவிக்கு உப்புமா செய்வது எப்படி என்று விளக்குவார். அவர் சொல்லும் ஒவ்வொன்றிற்கும் அவரது வீட்டுக்காரம்மா, ‘அதான் எனக்கு தெரியுமே!’ என்று வெறுப்பேற்றிக் கொண்டே இருக்கும். ‘அதுக்குப் பிறகு என்ன?’ என்று கேட்டால், ‘அதானே தெரியாது’ என்று சொல்லும்.

அதைப் போல, எகனாமிஸ்ட் சொல்லும் காரணங்களெல்லாம்தான் எங்களுக்குத் தெரியுமே!

அவற்றை நிவர்த்திக்க அரசு என்ன செய்யப் போகிறது?

அதான் எங்களுக்குத் தெரியாது!

1 Comment »

The URI to TrackBack this entry is: http://salahuddin.blogsome.com/2008/03/30/p13/trackback/

  1. நானும் ஒரு தடவை சொல்லிக்கொள்கிறேன்… அதான் எனக்கும் தெரியுமே!!!!… :-)

    Comment by Sathya — March 30, 2008 @ 6:07 pm

RSS feed for comments on this post.

Leave a comment

Line and paragraph breaks automatic, e-mail address never displayed, HTML allowed: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <code> <em> <i> <strike> <strong>