‘இண்டியன் பங்க்சுவாலிட்டி’
March 24, 2008நம்ம ஊரைப் பத்தியோ நாட்டைப் பத்தியோ மத்தவங்க என்ன நினைக்குறாங்கன்னு தெரிஞ்சுக்குறதுல ஒரு சுவாரஸ்யம் இருக்கு. நமக்கே தெரிந்திருக்காத சில விஷயங்களைக் கூட சில சமயங்களில் மத்தவங்க சொல்வாங்க.
அது ஒரு மேலாண்மை பயிற்சி வகுப்பு. வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்து சுமார் 35 பேர் கலந்து கொண்டிருந்தார்கள். அன்றைய பாடம், இந்தியாவில் தொழில் தொடங்கவிருக்கும் ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவைப் பற்றி என்னென்னவெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதைப் பற்றி.
வகுப்பை நடத்திய பேராசிரியர் கேட்டார், “இந்தியாவுடன் வியாபாரத் தொடர்பு அனுபவங்கள் உடைய யாரேனும் இங்கே இருக்கிறீர்களா?”. நான் மவுனமாக இருக்க முடிவு செய்தேன். இத்தாலியப் பெண்மணி ஒருவர் கையை உயர்த்தினார். இந்தியாவுடன் சுமார் 10 ஆண்டுகளாக வியாபாரத் தொடர்பில் இருக்கிறாராம். இந்தியாவின் பல முக்கிய நகரங்களுக்கு சென்றிருக்கிறாராம். சில சமயங்களில் மாதக் கணக்கில் இந்தியாவில் தங்கி சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டிருப்பதாகவும் சொன்னார்.
‘இந்தியர்கள் ரொம்ப நல்லவங்க, வல்லவங்க’ என்று ரொம்ப ‘நல்லத்தனமான’ தகவல்களைச் சொன்னவர், பிறகு ‘மற்ற’ விஷயங்களுக்கு வந்தார்.
“இந்தியாவில் பல வித கலாச்சாரங்களை பின்பற்றும் மக்கள் வசிக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு பகுதியும் தனித்தன்மை கொண்டது. ஒரு நிறுவனம் இந்தியாவின் எந்தப் பகுதியில் தொழில் தொடங்கப் போகிறதோ அந்தப் பகுதியின் கலாச்சாரத்தினை நன்றாக புரிந்து கொள்வது அவசியம்.
“குறிப்பாக இந்தியாவில் நிலவும் சாதி அமைப்பு… இது மிகவும் சென்சிடிவ் ஆன ஒரு விஷயம். சில சாதிப் பிரிவினர் மற்ற சாதிப் பிரிவினருடன் கலந்து பழக மாட்டார்கள். சில பிரிவினர், வேறு சில பிரிவினரின் கீழ் பணியாற்ற ஒப்ப மாட்டார்கள். வேலைக்குப் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியது இது!”
சாதி அமைப்பு நாமெல்லாம் அறிந்ததுதான்! ஆனால் அதுவே வெளிநாட்டினரின் கண்ணோட்டத்தில் HR பாலிசியை தீர்மானிக்கும் ஒரு காரணியாக இருக்கும் என்பது எனக்கு புதிய விஷயம்.
பயிற்சி நடத்துனர் அவர் பங்கிற்கு சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். “இந்தியர்கள் எதையுமே மிக நிதானமாக செய்து பழக்கப் பட்டவர்கள். அதாவது, எதையும் குறித்த நேரத்தில் அவர்கள் துவங்குவது அரிது. (நம்ம ‘இண்டியன் பங்க்சுவாலிட்டி’யைத்தான் அப்படி சொல்றார்!). இந்த மனப்போக்கிற்கு என்ன காரணம் என்று, இதற்கு முந்திய பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட இந்தியர் ஒருவரைக் கேட்டேன். அவர் சொன்னார், ‘காலத்தைப் பற்றி நாங்கள் ஏன் கவலைப் பட வேண்டும்? எங்கள் கலாச்சாரத்தில் காலம் என்பது முடிவற்றது. ஒருவரின் இந்த வாழ்வு முடிந்து போனால், அவர் இன்னொரு பிறவியாக இன்னொரு வாழ்வைத் துவங்கப் போகிறார் என்று அர்த்தம். அவர் இந்தப் பிறவியில் செய்யாமல் விட்டதை அடுத்தப் பிறவியில் செய்யலாமே?”
அப்படியும் இருக்குமோ?

