அதான் எங்களுக்குத் தெரியுமே!

March 30, 2008

சமீபத்தில் மும்பை சென்று வந்த வெளிநாட்டுக்காரர் ஒருவர் சொன்னார், “மும்பை கட்டிடங்களில் பாதுகாப்பாக லிஃப்டில் பயணிக்க வேண்டுமெனில், ஒவ்வொரு முறையும் 40 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். ஏனெனில், மும்பையில் சராசரியாக 40 நிமிடங்களுக்கு ஒருமுறை மின்தடை ஏற்படுகிறது. நீங்கள் அதிக பட்சமாக 40 நிமிடங்கள் காத்திருந்து மின்தடை ஏற்பட்டு நீங்கியபின் லிஃப்டில் பயணித்தீர்களென்றால் அடுத்த 40 நிமிடங்களுக்கு லிஃப்டில் சிக்கிக் கொள்ளும் அபாயத்திலிருந்து தப்பலாம்”.

இது உண்மை நிலவரத்தை சற்றே மிகைப்படுத்தி வேடிக்கையாகச் சொல்லப் பட்டதுதான் என்றாலும், இதைச் சொன்னவர் டி-ஷர்ட், அரைக்கால் சட்டை, கழுத்தில் கேமரா சகிதம் இந்தியாவுக்கு வந்துச் சென்ற சுற்றுலாப் பயணி என்றால், அவரது நகைச்சுவையைக் கேட்டு நாமும் சிரித்து விட்டு மறந்து விடலாம். ஆனால், இப்படிச் சொன்னவர், பல நாடுகளில் தொழிற்சாலைகள் அமைத்து நடத்தி வரும் பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் தலைவர்; இந்தியாவிலும் ஒரு தொழில் நிறுவனம் தொடங்கும் திட்டத்தை பரிசீலித்துக் கொண்டிருப்பவர் எனும்போது, அவரது நகைச்சுவைக்கு பின்னே மெலிதான ஒரு கவலையும் ஒளிந்து கொண்டிருப்பது தெரிகிறது.

40 நிமிடங்களுக்கு ஒருமுறை மின்தடை ஏற்படுமெனில் ஒரு தொழிற்சாலையை நடத்துவது எப்படி என்ற கவலை ஏற்படுவது நியாயம்தானே? வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்திழுக்க விரும்பும் இந்தியா கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் இது போல நிறைய இருக்கின்றன.

‘தி எகனாமிஸ்ட்’ இதழ் (மார்ச் 8-14) ‘இந்தியாவின் வளர்ச்சியை தடுப்பது எது?’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது.

‘கடந்த 15 ஆண்டுகளாக இந்தியா வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது. இந்திய நிறுவனங்கள் உலக தரத்திலான நிறுவனங்களுடன் போட்டி போடுகின்றன. மொத்த உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு கணிசமானது’ எனப் புகழும் அக்கட்டுரை, இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை தடுக்கும் காரணிகளையும் பட்டியலிடுகிறது.

‘கம்யூனிஸ்ட்களை நம்பி செயல்படும் அரசு, சாதி முறை, மின் தடைகள், கடுமையான தொழிலாளர் நலச் சட்டங்கள் போன்ற பல காரணிகள் இந்தியப் பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்குகின்றன.

இதையெல்லாம் விட பெரிய முட்டுக்கட்டை, ஊழல் மலிந்த அரசு இயந்திரமே! . அரசு அறிவிக்கும் நலத்திட்டங்களின் பலன்கள் மக்களை சென்றடைய விடாமல் தடுக்கும் தடைக்கல்லாய் இருப்பது இதுதான். இந்த பொதுப்பணித்துறையை சீர்திருத்தாமல் நாட்டு நலனுக்காக அரசு எடுக்கும் முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீராகவே வீணாகிப் போகும்.

பழைய படம் ஒன்றில் நடிகர் தங்கவேலு தன் மனைவிக்கு உப்புமா செய்வது எப்படி என்று விளக்குவார். அவர் சொல்லும் ஒவ்வொன்றிற்கும் அவரது வீட்டுக்காரம்மா, ‘அதான் எனக்கு தெரியுமே!’ என்று வெறுப்பேற்றிக் கொண்டே இருக்கும். ‘அதுக்குப் பிறகு என்ன?’ என்று கேட்டால், ‘அதானே தெரியாது’ என்று சொல்லும்.

அதைப் போல, எகனாமிஸ்ட் சொல்லும் காரணங்களெல்லாம்தான் எங்களுக்குத் தெரியுமே!

அவற்றை நிவர்த்திக்க அரசு என்ன செய்யப் போகிறது?

அதான் எங்களுக்குத் தெரியாது!

‘இண்டியன் பங்க்சுவாலிட்டி’

March 24, 2008

நம்ம ஊரைப் பத்தியோ நாட்டைப் பத்தியோ மத்தவங்க என்ன நினைக்குறாங்கன்னு தெரிஞ்சுக்குறதுல ஒரு சுவாரஸ்யம் இருக்கு. நமக்கே தெரிந்திருக்காத சில விஷயங்களைக் கூட சில சமயங்களில் மத்தவங்க சொல்வாங்க.

அது ஒரு மேலாண்மை பயிற்சி வகுப்பு. வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்து சுமார் 35 பேர் கலந்து கொண்டிருந்தார்கள். அன்றைய பாடம், இந்தியாவில் தொழில் தொடங்கவிருக்கும் ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவைப் பற்றி என்னென்னவெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதைப் பற்றி.

வகுப்பை நடத்திய பேராசிரியர் கேட்டார், “இந்தியாவுடன் வியாபாரத் தொடர்பு அனுபவங்கள் உடைய யாரேனும் இங்கே இருக்கிறீர்களா?”. நான் மவுனமாக இருக்க முடிவு செய்தேன். இத்தாலியப் பெண்மணி ஒருவர் கையை உயர்த்தினார். இந்தியாவுடன் சுமார் 10 ஆண்டுகளாக வியாபாரத் தொடர்பில் இருக்கிறாராம். இந்தியாவின் பல முக்கிய நகரங்களுக்கு சென்றிருக்கிறாராம். சில சமயங்களில் மாதக் கணக்கில் இந்தியாவில் தங்கி சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டிருப்பதாகவும் சொன்னார்.

‘இந்தியர்கள் ரொம்ப நல்லவங்க, வல்லவங்க’ என்று ரொம்ப ‘நல்லத்தனமான’ தகவல்களைச் சொன்னவர், பிறகு ‘மற்ற’ விஷயங்களுக்கு வந்தார்.

“இந்தியாவில் பல வித கலாச்சாரங்களை பின்பற்றும் மக்கள் வசிக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு பகுதியும் தனித்தன்மை கொண்டது. ஒரு நிறுவனம் இந்தியாவின் எந்தப் பகுதியில் தொழில் தொடங்கப் போகிறதோ அந்தப் பகுதியின் கலாச்சாரத்தினை நன்றாக புரிந்து கொள்வது அவசியம்.

“குறிப்பாக இந்தியாவில் நிலவும் சாதி அமைப்பு… இது மிகவும் சென்சிடிவ் ஆன ஒரு விஷயம். சில சாதிப் பிரிவினர் மற்ற சாதிப் பிரிவினருடன் கலந்து பழக மாட்டார்கள். சில பிரிவினர், வேறு சில பிரிவினரின் கீழ் பணியாற்ற ஒப்ப மாட்டார்கள். வேலைக்குப் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியது இது!”

சாதி அமைப்பு நாமெல்லாம் அறிந்ததுதான்! ஆனால் அதுவே வெளிநாட்டினரின் கண்ணோட்டத்தில் HR பாலிசியை தீர்மானிக்கும் ஒரு காரணியாக இருக்கும் என்பது எனக்கு புதிய விஷயம்.

பயிற்சி நடத்துனர் அவர் பங்கிற்கு சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். “இந்தியர்கள் எதையுமே மிக நிதானமாக செய்து பழக்கப் பட்டவர்கள். அதாவது, எதையும் குறித்த நேரத்தில் அவர்கள் துவங்குவது அரிது. (நம்ம ‘இண்டியன் பங்க்சுவாலிட்டி’யைத்தான் அப்படி சொல்றார்!). இந்த மனப்போக்கிற்கு என்ன காரணம் என்று, இதற்கு முந்திய பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட இந்தியர் ஒருவரைக் கேட்டேன். அவர் சொன்னார், ‘காலத்தைப் பற்றி நாங்கள் ஏன் கவலைப் பட வேண்டும்? எங்கள் கலாச்சாரத்தில் காலம் என்பது முடிவற்றது. ஒருவரின் இந்த வாழ்வு முடிந்து போனால், அவர் இன்னொரு பிறவியாக இன்னொரு வாழ்வைத் துவங்கப் போகிறார் என்று அர்த்தம். அவர் இந்தப் பிறவியில் செய்யாமல் விட்டதை அடுத்தப் பிறவியில் செய்யலாமே?”

அப்படியும் இருக்குமோ?

மதினாவில் மதானி!

January 24, 2008

டிசம்பர் 14 வெள்ளிக்கிழமை, மதினாவின் மஸ்ஜிதுந்நபவி என்னும் புனிதப் பள்ளியில் தொழுகை முடித்து நானும் எனது நண்பரும் திரும்பிக் கொண்டிருந்தபோது, பள்ளியின் இன்னொரு வாசலிலிருந்து சக்கர நாற்காலியில் அமர்ந்த வண்ணம் அந்த மனிதர் வெளியேறிக் கொண்டிருந்தார். அவருக்கு பின்னே சிவப்பு நிற சீருடையில் இருவர், அவர்களைச் சூழ பத்துப் பன்னிரண்டு பேர். அவரை நான் இதற்கு முன் நேரில் பார்த்ததில்லை; தவிர பத்திரிக்கைகளில் வெளியான அவரது பழைய புகைப்படங்களுக்கும் தற்போதைய தோற்றத்திற்கும் பெருமளவு வித்தியாசம் இருந்தது என்றபோதிலும், அவரை இன்னார் என்று அடையாளப் படுத்த முடிந்தது. அவருக்கு அருகில் நின்ற ஒருவரிடம் அதைக் கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டோம். அப்துல் நாசர் மதானி தான் அவர்.

அருகில் சென்று சலாம் சொன்னோம். சக்கர நாற்காலியை தள்ளிச் சென்றவர்கள் சற்று நிறுத்தினார்கள். ‘நாங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், சிங்கையிலிருந்து வருகிறோம்’ என்று அறிமுகப் படுத்திக் கொண்டோம். ‘அப்படியா?’ என்றார். உடல் தளர்ந்திருந்தாலும் முகத்தில் புத்துணர்ச்சி தெரிந்தது. ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்றோம். ‘நன்றாக இருக்கிறேன். துஆ செய்யுங்கள்’ என்றார்.

அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை. இருப்பிடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தவரை அந்த வெயிலில் இன்னும் நிறுத்தி வைத்திருப்பது சரியல்ல என்றும் தோன்றியது. சலாம் சொல்லிவிட்டு விடை பெற்றுக் கொண்டோம்.

மதானி சிறையிலிருந்து வெளியான போது இனி கேரள முஸ்லிம் மக்களின் வாழ்க்கை மேம்பட பாடுபடப் போவதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இறைவன் அவருக்கு நீடித்த ஆயுளைக் கொடுத்து, சமுதாயத்திற்கு பலனளிக்கும் அவரது நோக்கங்கள் நிறைவேற போதிய ஆற்றலையும் வழங்குவானாக என பிரார்த்தித்தோம்.

பின்குறிப்பு: ‘கைதியின் கதை’ என்ற தலைப்பில் அப்துல் நாசர் மதானி பற்றி எடுக்கப்பட்ட ஒரு குறும்படம் இந்தத் தளத்தில் காணக் கிடைக்கிறது.

விமானப் பயணத்தில்…!

January 19, 2007

சிங்கையிலிருந்து சென்னை செல்லும் விமானம் அது. cநடு வரிசையில் ஒரு ஓர இருக்கை என்னுடையது. விமானம் நிரம்பி வழிந்தது. எல்லா பக்கங்களிலும் நம் இந்திய முகங்கள். இப்போதெல்லாம் நிறைய சீன முகங்களும் தென்படுகின்றன. உலக மயமாக்கலின் விளைவு!

எனது பக்கத்து இருக்கையில் இருந்தவர் தமிழர்தான். சந்தேகமேயில்லை. நான் இருக்கையில் அமர்ந்த இரண்டாவது வினாடியில் பேச ஆரம்பித்தவர் வெகு நேரத்திற்கு நிறுத்தவில்லை. இதுபோல இடைவெளி விடாமல் சுவாரஸ்யமும் குன்றாமல் தொடர்ந்து பேசும் கலை சிலருக்கு மட்டுமே வாய்க்கும் போலிருக்கிறது.

அவர் தஞ்சை மாவட்டத்துக்காரராம். 40 வயது வரை விவசாயம் பார்த்துக் கொண்டிருந்தவர் சரியான வருமானம் இல்லாததால் அதன் பிறகு முடிவெடுத்து, பாஸ்போர்ட் எடுத்து, ஏஜண்டை பிடித்து, காசு கொடுத்து, work permit எடுத்து, நல்ல வேளையாக ஏமாறாமல் சிங்கப்பூர் வந்து 10 வருடம் ஆகிவிட்டதாம்.

அவருக்கு அடுத்து இருந்த இரண்டு இருக்கைகளுக்கு இரண்டு இளம் பெண்கள் வந்தார்கள். அவர்கள் தனித்தனியாகத்தான் வந்தார்கள். முதலில் வந்தவர் கொஞ்சம் வெகுளியாகவும் கிராமியக்களையுடனும் இருந்தார். அடுத்து வந்தவர் reserved type போல தெரிந்தார். அதில் முதலாமவர் நம் முன்னாள் விவசாயி அளவிற்கு இல்லாவிட்டாலும் கொஞ்சம் கலகலவென்று பேசக்கூடியவர் போலிருக்கிறது. அவர் கிட்டத்தட்ட தனது வயதையொத்த அந்த reserved type பெண்ணிடம் பேசத்துவங்கி கொஞ்ச நேரத்திலேயே அவர்கள் இருவரும் தோழிகள் போல பேச ஆரம்பித்து விட்டார்கள்.

அதுவரை என்னிடம் கதைத்துக் கொண்டிருந்த முன்னாள் விவசாயி அந்தப் பெண்கள் பக்கம் திரும்பி பேச்சுக் கொடுத்தார். அறிமுகமில்லாத ஆடவரிடம் பேச அவர்கள் தயங்கியது போல தெரிந்தது.

“என்னோட பேசுறதுக்கு ஏன் தயங்குறீங்க? எனக்கு உங்க வயசுல ஒரு பொண்ணு இருக்கு. நான் உங்களுக்கு அப்பா மாதிரி” என்று பாசத்தால் கட்டிப்போட்டார் மு.வி. அதன் பிறகே அவர்கள் அவருடன் சகஜமாக பேச ஆரம்பித்தார்கள்.

அந்தப் பெண்கள் இருவருமே சிங்கையில் இல்லப் பணிப்பெண்களாக வேலை செய்கிறார்களாம்.

சிங்கையில் இல்லப் பணிப்பெண்ணாக வேலை செய்வது அவ்வளவு இலகுவானதல்ல. எஜமானர்கள் நல்ல மனதுடையவர்களாக இருந்தால் சமாளிக்கலாம். அப்படி இல்லாவிட்டால் பணிப்பெண்களுக்கு பெரும்பாலும் நரக வாழ்க்கைதான். ஓய்வில்லாத வேலை, தூங்குவதற்கு போதிய நேரமின்மை, வீட்டு ஆண்களின் பாலியல் தொந்தரவுகள் என பலவகை பிரச்னைகளை அவர்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கும். ஜன்னலை துடைக்கும்போதோ துணி காயப்போடும்போதோ உயரத்திலிருந்து தவறி விழுந்து பணிப்பெண்கள் உயிரை விட்ட சம்பவங்களும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இது ஒருபுறம் என்றால் எஜமானர்களை வில்லங்கத்தில் மாட்டிவிடும் பணிப்பெண்களும் இருக்கிறார்கள். காதல் விவகாரங்கள், சில்லறைத் திருட்டுகள் மட்டுமல்லாமல் கொலை செய்யக்கூட துணிந்த பணிப்பெண்களைப் பற்றி செய்தித்தாட்களில் படிக்க நேரிடுகிறது.

“_ _ _ _ _ _ _ அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்ற பாடலில் சிச்சுவேஷனுக்கு தகுந்த மாதிரி ‘எஜமானர்’ அல்லது ‘பணிப்பெண்’ என்று பெயரை மாற்றி மாற்றி போட்டு அவரவர்கள் பாடிக் கொள்ள வேண்டியதுதான்.

பெரும்பாலும் பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா பெண்கள் அதிகமாக இந்த வேலையில் இருக்கிறார்கள் என்றாலும் நம்மவர்கள் வீடுகளில் இந்தியப் பெண்களும் இப்பணியில் இருக்கிறார்கள்.

விமானம் சென்னையை நெருங்கிய நேரத்தில் விமானப் பணிப்பெண் அனைவருக்கும் குடிநுழைவு படிவம் (embarkation card) வினியோகித்தார். விவசாயி நண்பர் அவரது படிவத்தையும் பாஸ்போர்ட்டையும் உரிமையுடன் என்னிடம் தந்து ‘இதை எழுதி தாங்க தம்பி’ என்றார். நான் அதை எழுதத் தொடங்கினேன்.

“உன்னோடதையும் குடும்மா. தம்பி எழுதி கொடுப்பாரு”

இன்னொரு பாஸ்போர்ட்டும் படிவமும் என்னிடம் வந்து சேர்ந்தது.

“உன்னோடது?”

“நானே எழுதிக்குவேங்க” என்றார் எந்த reserved type பெண்.

“அப்படியா? நீ படிச்சிருக்கியா?”

“ஆமாங்க. எம்.எஸ்.சி படிச்சிருக்கேங்க” என்று பதில் வந்தது!

கை கோர்க்கும் சீனாவும் இந்தியாவும்!

January 12, 2006

PetroKazakhstan என்னும் எண்ணை நிறுவனத்தை வாங்க இருபெரும் ஆசிய சக்திகளான சீனாவும் இந்தியாவும் போட்டியிட்டன. இந்த போட்டி பற்றி எனது முந்திய பதிவில் எழுதியிருக்கிறேன். இதில் வெற்றி பெற்றது சீனா.

வெகு வேகமாக வளர்ந்து வரும் இரு ஆசிய அண்டை நாடுகள் சீனாவும் இந்தியாவும். இவ்விரு நாடுகளின் பொருளாதார நடவடிக்கைகள் வேகம் எடுக்கும் அளவிற்கு இந்நாடுகளில் எண்ணைக்கான தேவையும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

2004-ல் இந்தியா ஒரு நாளைக்கு 2 மில்லியன் பீப்பாய்க்கு மேல் எண்ணை உபயோகித்திருக்கிறது. இவற்றில் 70 சதவிகிதத்திற்கு அதிகமானவை இறக்குமதி செய்யப்பட்ட எண்ணைதான். 2025-ல் இந்தியாவிற்கு ஒருநாளைக்கு 7.4 மில்லியன் பீப்பாய்க்கு மேல் எண்ணை தேவைப்படும் என ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

சீனா 2003-லேயே ஒரு நாளைக்கு 5.46 மில்லியன் பீப்பாய் எண்ணை உபயோகித்திருக்கிறது. இன்றைய நிலையில் இது இரு மடங்காக உயர்ந்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சீனாவில் உபயோகிக்கப்படும் எண்ணையின் அளவு மொத்த உலக உபயோகத்தில் 7% ஆக இருக்கிறது. சீனா தனக்கு தேவையான எண்ணணயில் மூன்றில் ஒரு பங்கை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது.

இந்த சூழ்நிலையில் வெளிநாட்டு எண்ணை நிறுவனங்களை வாங்குவதில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் போட்டி நிலவுவது தவிர்க்க இயலாதது. இவ்விரு நாடுகளும் அமெரிக்கா போன்ற வல்லரசுகளுடனும் போட்டியிட வேண்டும். இவ்விரு நாடுகளின் பொருளாதார நடவடிக்கைகளையும் இவற்றிற்கிடையே நிலவும் போட்டியையும் மொத்த உலகமும் உற்று கவனித்து வருகிறது.

இந்த நூற்றாண்டின் மகத்தான பொருளாதார சக்திகளாக வளரக்கூடிய சாத்தியக்கூறு இந்த இரு நாடுகளுக்குமே இருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இவ்விருவரும் தங்களுக்கிடையே போட்டியிட்டுக்கொண்டிருந்தால் இவர்களின் வளர்ச்சி என்னாவது? இந்த சூழலில்தான் இந்த இரு நாடுகளும் இணைந்து புத்திசாலித்தனமான சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். அதாவது, இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான போட்டியை ஆரோக்கியமானதாக வைத்துக் கொள்ளும் அதே வேளையில், தேவை ஏற்படும்போது இருவரும் இணைந்து செயலாற்றுவது என்பதுதான் அந்த முடிவு.

கடந்த ஆகஸ்டில் PetroKazakhstan கைநழுவி போன உடனேயே, இனி வரும் சந்தர்ப்பங்களில் சீனாவுடன் இணைந்து செயலாற்றுவதற்கான விருப்பத்தை இந்தியா அறிவித்தது. சீனாவும் இந்த ஏற்பாட்டிற்கு ஆர்வம் தெரிவித்தது.

முதன் முறையாக சென்ற டிசம்பரில் இருநாட்டு எண்ணை நிறுவனங்களாகிய ONGC-யும் CNPC (China National Petroleum Corp)-யும் இணைந்து சிரியாவின் Al-Furat எண்ணை வயல்களை வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு இந்த இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது ஒரு சிறந்த முன்னேற்பாடாகவே தோன்றுகிறது. Win Win Situation என்பது போல இந்த ஏற்பாட்டில் இரு நாடுகளுக்குமே அனுகூலங்கள் அதிகம். இருவரின் வாங்கும் சக்தியும் ஒருங்கிணையும்போது பேரம் பேசுவதற்கான பலம் அதிகரிக்கிறது. Economy of Scale -ஐக் கொண்டு செலவுகளையும் ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம். அமெரிக்கா போன்ற பெரும் போட்டியாளர்களையும் ஓரளவுக்கு சமாளிக்கலாம்.

எதிலும் சந்தேகம் கொள்ளும் சிலர் (sceptics) ‘இதெல்லாம் சரி வருமா?’ என கேள்வி எழுப்புகிறார்கள். 1962-ல் ஒரு எல்லைத்தகராறை காரணமாக கொண்டு போரிட்ட இரு நாடுகளும் இப்போது நட்புறவு கொள்வது நடக்குமா? அப்படியே நடந்தாலும் இந்த உறவு எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும்? என்கிறார்கள் இவர்கள்.

இரு நாடுகளுக்கும் இடையில் போர் நடந்தது உண்மைதான் என்ற போதிலும், தற்போதைய சூழ்நிலையில் இருவரின் கவனமும் தத்தம் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் இருக்கும்வரை, சிறு சிறு அரசியல் மனஸ்தாபங்கள் பெரிய அளவில் வெடிக்க வாய்ப்பில்லை. பொருளாதார உறவுகள் மேலும் வலுப்பெற்றால், அது அத்தகைய அரசியல் மனஸ்தாபங்களை அமுங்கிப்போகவும் செய்யலாம்.

பொறுத்திருந்து பார்ப்போம்.!

தோல்வியடைந்த துணிகர முயற்சி!

மனிதன் உயிர் வாழ மூச்சுக்காற்று எவ்வளவு அவசியமோ அந்த அளவிற்கு அமெரிக்க பொருளாதாரத்திற்கு எண்ணை வளம் அவசியம். இது சற்று மிகைப்படுத்தப்பட்ட வாக்கியம் போல தோன்றினாலும் உண்மை நிலவரத்திற்கும் இதற்கும் தூரம் அதிகமில்லை.

உலகின் மிகப்பெரிய 50 எண்ணை நிறுவனங்களின் பட்டியலில் பத்திற்கும் மேற்பட்டவை அமெரிக்க நிறுவனங்களே. இந்த நிறுவனங்களில் ஒன்றான Unocal-ஐ சில நாட்களுக்கு முன் சீனா விலை பேசியது. China National Offshore Oil Corporation (CNOOC) என்ற சீன நிறுவனம் Unocal-க்கு 18.5 பில்லியன் டாலர் வரை தர தயாராக இருந்தது.

CNOOC சீனாவின் புகழ்வாய்ந்த, சிறப்பாக நிர்வகிக்கப்பட்டுவரும் நிறுவனங்களுள் ஒன்று. Shell போன்ற அமெரிக்க எண்ணை நிறுவனங்களில் இயக்குனர்களாக இருந்தவர்கள் சிலர் தற்போது CNOOC-யின் இயக்குனர் குழுவில் இருக்கிறார்கள்.

Unocal-ஐ வாங்குவதற்கு ஏற்கனவே ஆர்வம் காட்டிய அமெரிக்காவின் மற்றொரு எண்ணை நிறுவனமான Chevron, 17 பில்லியன் டாலர் மட்டுமே கொடுக்க முன் வந்திருந்தது. அதுவும் முழுவதும் பணமாக அல்லாமல், ஒரு பகுதி தனது நிறுவனத்தில் பங்குகளாகவும் மற்றொரு பகுதியை பணமாகவும் அறிவித்திருந்தது. ஆனால் CNOOC தனது 18.5 பில்லியன் டாலரையும் பணமாகவே தருவதாக அறிவித்தது. அது மட்டுமல்லாமல் இந்த நிர்வாக மாற்றம் மூலமாக அமெரிக்கர்களின் வேலை எதுவும் பறிபோகாது என உத்தரவாதமும் அளித்திருந்தது.

எல்லா வகையிலும் கவர்ச்சிகரமானதாக இருந்தபோதிலும், CNOOC-யின் திட்டத்திற்கு அமெரிக்க அரசியல்வாதிகளிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. தம் நாட்டின் பொருளாதார வளத்திற்கு அதிமுக்கியமான எண்ணை வளத்தின் ஒரு பகுதியை (சிறு பகுதியாக இருந்தாலும்..) சீனா போன்ற கம்யூனிஸ நாட்டின் கைவசம் ஒப்படைப்பதா? என்ற தயக்கமே இதன் முதல் காரணம்.

அமெரிக்க அரசியல்வாதிகளிடமிருந்து இத்தகைய எதிர்ப்பலைகள் கிளம்புவது ஒன்றும் புதிதல்ல. 1980-களில் ஜப்பான் தீவிரமாக அமெரிக்க நிறுவனங்களை வாங்க முற்பட்டபோது இதே போன்ற எதிர்ப்புகள் கிளம்பின. அன்றைய சூழ்நிலையில் அதிக அளவிலான வெளிநாட்டு முதலீடு தேசிய பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிடும் என்ற தேவையற்ற அச்சம் காரணமாக சொல்லப்பட்டது.

அரசியல் எதிர்ப்புகளை காரணம் காட்டியே Institutional Shareholder Services என்ற அமைப்பு Unocal பங்குதாரர்களை CNOOC-யின் ஆஃபரை (offer) நிராகரிக்கும்படி அறிவுறுத்தியது. அதுவரை தனது முயற்சியில் தீவிரமாக இருந்து எதிர்ப்புகளை சமாளித்துக் கொண்டிருந்த CNOOC, இந்த அறிவிப்பு வெளியானவுடன் தான் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து விட்டது. இனி, அமெரிக்காவின் இரண்டாவது பெரிய எண்ணை நிறுவனமான Chevron, Unocal-ஐ தன் வசப்படுத்திக்கொள்ள தடையேதும் இல்லை.

இந்த முடிவு முன்பே யூகிக்க முடிந்ததுதான் என்றாலும், அமெரிக்காவிற்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்த துறை ஒன்றின் நிறுவனம் ஒன்றை விலைபேசிய சீனாவின் துணிகர முயற்சி பாராட்டத்தக்கது. சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பது என்பது இதுதானோ?

சீனாவின் இந்த முயற்சி ஒரு தனிப்பட்ட நிகழ்வல்ல, மாறாக ஒரு trend என்றுதான் சொல்லவேண்டும். சீனா தனது ஷாப்பிங் கூடையை கையிலெடுத்து சில மாதங்கள் ஆகின்றன. 50 சீன நிறுவனங்களையாவது Global Champion-களாக உருவாக்கி அவற்றை உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களின் பட்டியலில் இருத்தி வைத்து அழகு பார்ப்பது என்பது சீனாவின் கனவுத்திட்டங்களில் ஒன்று. இத்திட்டத்தின் ஒரு அங்கமாக அரசாங்க ஆதரவுடன் பல சீன நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களை, குறிப்பாக அமெரிக்க நிறுவனங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கி விட்டன.

பிரான்ஸின் Thomson, கொரியாவின் Ssangyong, அமெரிக்காவின் IBM நிறுவனத்தின் கணிணி தயரிக்கும் துணைநிறுவனம் ஆகியவை ஏற்கனவே சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டன.

Unocal விஷயத்தில் சறுக்கி விட்டாலும் சீனா தன் முயற்சியில் சற்றும் மனம் தளர்ந்ததாக தெரியவில்லை. ஆனால் இனிமேலும் மற்ற நிறுவனங்களை வாங்கும் தன் முயற்சியை வெளிப்படையாக அறிவித்துவிட்டு செய்யுமா என்பது சந்தேகமே.

தற்போது, கனடாவின் PetroKazakhstan-ஐ வாங்க சீன நிறுவனமான China National Petroleum Corp (CNPC) முயற்சித்துக் கொண்டிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. இதிலும் போட்டி இல்லாமலில்லை. இதில் சீனாவுடன் போட்டி போடுவது வேறு யாருமல்ல, லண்டனில் வசிக்கும் பில்லியனர் லட்சுமி மிட்டல் தான். இந்தியாவின் ONGC-யுடன் கைகோர்த்து மிட்டல் களத்தில் இறங்கியுள்ளார்.

போட்டியில் வென்றது இரு ஆசிய சக்திகளில் எது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

பின்னூட்டங்கள்:

6 Comments:

dondu(#4800161) said…
“அன்றைய சூழ்நிலையில் அதிக அளவிலான வெளிநாட்டு முதலீடு தேசிய பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிடும் என்ற தேவையற்ற அச்சம் காரணமாக சொல்லப்பட்டது.”

தேவையற்ற அச்சம் என்று எப்படிச் சொல்லுகிறீர்கள் சலாஹுத்தீன் அவர்களே? வெள்ளைக்காரர்கள் இம்மாதிரி வணிக நோக்கத்தில் உள்ளே வந்துதானே இந்தியாவையே அடிமை கொண்டனர். ஆகவே உள்ளூர்காரர்கள் இம்மாதிரி எம்முயற்சியையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது தவிர்க்க முடியாதுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

August 26, 2005 5:27 PM

G.Ragavan said…
டோண்டு, தேவையற்ற அச்சமா தேவையுள்ள அச்சமா என்பது ஒரு புறம் இருக்கட்டும்.

திறந்த பொருளாதாரச் சந்தையில் எதுவும் நடக்கும். அகலக்கால் வைத்தவன் சறுக்குதல் நடந்தே தீரும். இனிமேலாவது அமெரிக்கா விழித்துக் கொண்டு பேராசையைக் குறைத்துக் கொண்டால் நல்லது. அல்லது எந்த வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டென்பது நிரூபிக்கப் பட்டுவிடும்.

August 26, 2005 5:54 PM

சலாஹுத்தீன் said…
டோண்டு அவர்களே, வெள்ளைக்காரர்கள் இந்தியாவை அடிமைப்படுத்திய 18,19-ம் நூற்றாண்டுகளில் வேண்டுமானால் இந்த அச்சம் நியாயமானதாக இருந்திருக்கலாம். ஆனால் உலகமயமாக்கலின் தாக்கத்தால் உலகமே ஒரு கிராமமாக சுருங்கி இருக்கும் இன்றைய சூழ்நிலையில் இது தேவையற்ற அச்சமாகத்தான் படுகிறது.

அது தவிர, சில ஆண்டுகளுக்கு முன் சவுதிஅரேபியாவின் Aramco அமெரிக்காவின் எண்ணை நிறுவனமொன்றை வாங்கியபோது இத்தகைய எதிர்ப்புகள் கிளம்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராகவன், உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

August 26, 2005 7:07 PM

dondu(#4800161) said…
“ஆனால் உலகமயமாக்கலின் தாக்கத்தால் உலகமே ஒரு கிராமமாக சுருங்கி இருக்கும் இன்றைய சூழ்நிலையில் இது தேவையற்ற அச்சமாகத்தான் படுகிறது.”

அப்படீங்கறீங்க? வெளிநாட்டுப் பத்திரிகைகள் இந்தியாவில் கடை திறப்பதையும் பேசாமல் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானா? என்னதான் உலகமே கிராமமாகப் போனாலும் sensitive துறைகளில் வெளிநாட்டு முதலீடு நடப்பது எதிர்ப்புக்குள்ளகும்தானே.

“சவுதிஅரேபியாவின் Aramco அமெரிக்காவின் எண்ணை நிறுவனமொன்றை வாங்கியபோது இத்தகைய எதிர்ப்புகள் கிளம்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.”
சவுதியிடம் தேவையான அளவு உள்நாட்டு தொழில் வல்லுனர்கள் இல்லை என்பதும் உண்மைதானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

August 28, 2005 5:47 PM

நல்லடியார் said…
//சவுதியிடம் தேவையான அளவு உள்நாட்டு தொழில் வல்லுனர்கள் இல்லை என்பதும் உண்மைதானே//

உண்மைதான். :-(

August 28, 2005 6:55 PM

வாழைப்பழ விவகாரம்!

வெகு காலமாக நடந்து கொண்டிருந்த ஒரு வினோத வழக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. வெகுகாலமாக என்றால் இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த காலத்திலிருந்து. உலகின் பலம் பொருந்திய ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் சம்பந்தப்பட்ட இந்த வழக்கின் மூல காரணம் வாழைப்பழம்! ஆம்.. வாழைப்பழம்தான்.

இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பிறகு, ஐரோப்பிய நாடுகளான ஃபிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின் ஆகியவற்றிடம் காலனியாக இருந்த பல சிறிய நாடுகள் சுதந்திரமடைந்தன. இருந்தாலும் தமது முன்னாள் காலனி நாடுகளின் பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு தம்மாலான உதவிகளை செய்ய வேண்டியது தமது தார்மீக பொறுப்பு என்று உணர்ந்த ஐரோப்பிய நாடுகள், அந்தச்சிறு நாடுகளில் வாழைப்பழ உற்பத்தியை ஊக்குவித்தன. அந்தச்சிறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாழைப்பழங்களுக்கு தம் நாடுகளில் முன்னுரிமை வழங்கின. பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தன. இவ்வாறு, பிரிட்டன் ஜமைக்கா, டொமினிக்கா, செயின்ட் லூசியா போன்ற நாடுகளையும், ஃபிரான்ஸ் ஐவரி கோஸ்ட், கேமரூன் போன்ற நாடுகளையும் ஆதரித்தன. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனி தனது நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்படும் வாழைப்பழங்களுக்கு எந்தவித கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை.

1980-களின் இறுதியில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி இந்த சின்னஞ்சிறுத் தீவு நாடுகளின் தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வாழைப்பழ உற்பத்தியில் தொடர்புடையவர்களாக இருந்தனர்.

இந்த ஏற்பாட்டினால் அதிகம் பாதிக்கப்பட்டது லத்தீன் அமெரிக்க நாடுகளாகிய பிரேசில், கொலம்பியா, வெனிசுவேலா போன்ற நாடுகளில் பெருமளவில் வாழைப்பழம் பயிரிட்டுவந்த பெரிய நிறுவனங்கள்தான். (இந்த நாடுகளில் வாழைப்பழங்கள் பெரிய அளவில் பண்ணைகளில் விளைவிக்கப்படுவதால் அவற்றிற்கான உற்பத்தி செலவு மிக குறைவு. எனவே அவற்றின் விலையும் மலிவு). ஜெர்மனி போன்ற நாடுகளில் 50%-க்கும் மேற்பட்ட வாழைப்பழ சந்தையை தம் கைவசம் வைத்திருந்த இந்த நிறுவனங்கள், ஃபிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளில் தம் கைவரிசையைக் காட்ட முடியாமல் தவித்தன. இவை ஒன்றுகூடி உலக வர்த்தக நிறுவனமாகிய WTO-விடம் முறையிட்டன.

இதைத்தொடர்ந்து அமெரிக்காவும் களத்தில் குதித்தது. ஐரோப்பிய நாடுகள் வாழைப்பழ இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ளாவிடில், அந்நாடுகளிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சில ஆடம்பர பொருட்களுக்கு கடும் இறக்குமதி வரி விதிக்கப்போவதாக அறிவித்தது. அமெரிக்கா இங்கு ஏன் தன் மூக்கை நுழைக்க வேண்டும் என்கிறீர்களா? லத்தீன் அமெரிக்க நாடுகளில் வாழைப்பழ உற்பத்தியில் பெருமளவில் முதலீடு செய்திருப்பது அமெரிக்க நிறுவனங்கள்தானே!

ஐரோப்பிய நாடுகள் லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாழைப்பழங்களுக்கு ஒரு கோட்டா (quota) முறையை நடைமுறைப்படுத்தியிருந்தன. அதன்படி, லத்தீன் அமெரிக்க உற்பத்தியாளர்கள் ஆண்டு ஒன்றிற்கு 2.7மில்லியன் டன் வாழைப்பழங்களை ஒரு டன்னுக்கு $91 டாலர் வரி செலுத்தி ஐரோப்பிய நாடுகளில் இறக்குமதி செய்யலாம். இந்த கோட்டாவிற்கு மேலதிகமாக இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு ஒரு டன்னிற்கு $825 டாலர் (680 யூரோ) வரி கட்ட வேண்டும்.

ஐரோப்பிய நாடுகளின் இந்த கட்டுப்பாடுகள் சட்டவிரோதமானது என்று WTO 2000-ல் அறிவித்தது. நிர்ப்பந்தத்திற்கு பணிந்த ஐரோப்பிய நாடுகள் கோட்டா முறையை மறுபரிசீலனை செய்ய ஒப்புக்கொண்டன. சொன்னது போல சில ஆண்டுகள் கழித்து அவை ஒரு புதிய முறையை அறிவித்தன. ஜனவரி 2006-ல் அமுல்படுத்தப் போவதாக அறிவிக்கப்பட்ட அந்த புதிய முறைப்படி கோட்டா நீக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் எல்லா பழங்களுக்கும் வரி $279 டாலராக (230 யூரோ) குறைக்கப்பட்டது. லத்தீன் அமெரிக்க நாடுகள் இதையும் ஏற்றுக் கொள்ளாமல் ஆட்சேபம் தெரிவித்தன.

ஐரோப்பிய நாடுகள் முன்மொழிந்த புதிய முறையை ஆராய்ந்த WTO-வின் நிபுணர் குழு, இதுவும் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என அறிவித்து விட்டது. இந்த முறையின் மூலம் ஐரோப்பா தனது வாழைப்பழச் சந்தையை முழுமையாக திறந்து விட்டதாக ஆகாது என்று WTO கருத்து தெரிவித்தது.

WTO-வின் இந்த அறிவிப்பு வெளியானதும் பத்திரிக்கைகள், “வாழைப்பழ போரில் லத்தீன் அமெரிக்காவிடம் ஐரோப்பா தோல்வி” (EU loses banana war with Latin America) என செய்தி வெளியிட்டன. அதையே இந்த கட்டுரையின் முதல் வாக்கியமும் சொல்கிறது.

ஆனால், உண்மையில் இந்த விவகாரம் இன்னும் முடிவடையவில்லை என்று தோன்றுகிறது. லத்தீன் அமெரிக்க நாடுகள் கோட்டா முறை ரத்து செய்யப்படுவதை வரவேற்றாலும், 230 யூரோ வரி மிக அதிகம் என போர்க்கொடி தூக்கி உள்ளன. 75 யூரோ என்பது ஒரு நியாயமான வரியாக இருக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

பாதிக்கப்பட்ட சிறு நாடுகளின் கருத்து வேறு விதமாக இருக்கிறது. 230 யூரோ வரியே மிக குறைவு என அவர்கள் கருதுகின்றனர். இதன் மூலம் குறைந்த விலையில் ஐரோப்பிய சந்தைக்குள் நுழையும் லத்தீன் அமெரிக்க பழங்களுடன் தம்மால் போட்டி போட இயலாது என்பது என்பது அவர்களின் கவலை. மிக முக்கியமான ஐரோப்பியச் சந்தை கைநழுவிப்போவதன் மூலம் இந்தச் சிறு நாடுகளின் வாழைப்பழ ஏற்றுமதி தொழில் முற்றிலும் முடங்கிப்போகும் அபாயம் இருக்கிறது. வாழைப்பழ ஏற்றுமதி இந்தச் சிறு நாடுகளின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்ற சூழ்நிலையில் அவர்கள் கவலைப்படுவதில் உண்மை இல்லாமல் இல்லை.

இருதலைக்கொள்ளி எறும்பாய்த் தவிக்கும் ஐரோப்பிய நாடுகள் என்ன முடிவு எடுக்கப்போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பின்னூட்டங்கள்:

14 Comments:

நெல்லையன் said…
சலாஹுதீன் பாய், சுவாரசியமான பதிவுகள். சொல்லப்படும் தகவல் கட்டுரையின் நீளத்தால் சில சமயம் போரடிக்கிறது :-( தட்டவும் செய்யனும் தேவைப்பட்டால் குட்டவும் செய்யனும். இதேன் நம்ம பாலிஸி :-)

August 13, 2005 1:32 PM

சலாஹுத்தீன் said…
உங்களின் குட்டுக்கு நன்றி நெல்லையரே! background தகவல்களை விளக்கமாக சேர்த்ததால் பதிவு நீளமாக போய்விட்டது. இனி வரும் பதிவுகளில் குறைக்க முயல்கிறேன்.

August 13, 2005 4:37 PM

Ramya Nageswaran said…
வித்தியாசமான டாபிக்.. நிறைய எழுத வாழ்த்துக்கள்.

August 13, 2005 6:49 PM

சலாஹுத்தீன் said…
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரம்யா நாகேஸ்வரன்!

August 14, 2005 12:59 AM

அவதாரம் said…
நல்ல தகவல்களை தருகிறீர்கள்.நன்றி.

August 14, 2005 2:12 AM

சலாஹுத்தீன் said…
நன்றி அவதாரம் அவர்களே!

August 14, 2005 12:48 PM

பரஞ்சோதி said…
வலைப்பூவில் நல்ல விசயங்களை சொல்லத் தொடங்கியிருக்கும் சலாஹீத்தீன் அவர்களே! பாராட்டுகள்.

தொடர்ந்து எழுதுங்கள்.

August 14, 2005 12:57 PM

சலாஹுத்தீன் said…
நன்றி பரஞ்சோதி அவர்களே!

August 14, 2005 1:07 PM

Karai Vetti said…
சலாஹுத்தீன், வழமையான அக்கப்போர்களைத் தவிர்த்து மாறுபட்ட தளங்களில் பதிகிறீர்கள். பாராட்டுகள். தொடருங்கள், உங்கள் பதிவுகளை.

August 14, 2005 2:17 PM

அவதாரம் said…
அனைத்து இந்திய நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

August 15, 2005 9:29 AM

அனாமதேயம் said…
திண்ணையில் ‘அரவிந்த நீலகண்டன்’ என்ற பெயரில் எழுதியவன் தான் பின்னர் நேசகுமார், ஆரோக்கியம் என்ற பெயர்களில் வலைப்பதிவுகள் தொடங்கி இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் விமர்சிக்கிறான். திண்ணையின் கோப்புகளைத் தேடிப்பார்த்தால், அரவிந்த நீலகணடனின் எழுத்து நடையும், நேசகுமார், ஆரோக்கியம் என்ற பெயர்களில் எழுதுபவனின் எழுத்து நடையும் ஒரே மாதிரி இருப்பது தெரியும். இவனுக்கும், டோண்டு, மாயவரத்தான், ரஜினி ராம்கி போன்றவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இவர்கள் சில நேரங்களில் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதாய் காட்டிக் கொள்வதெல்லாம் வெறும் பம்மாத்து தான்.

இணையப் புலனாய்வு அதிகாரி

August 16, 2005 11:41 PM

G.Ragavan said…
சலாஹுதீன், உண்மையிலேயே அதியற்புதமான எழுத்துகளில் ஒரு அசிங்கமான அமெரிக்க அநியாயத்தைக் காட்டியிருக்கின்றீர்கள்.

என்னடா இதையெல்லாம் தட்டிக் கேட்க ஆளே இல்லையா என்று வருத்தம் வந்தாலும் கொழுத்த நண்டு வலையில் தங்காது என்பதால் பொறுத்திருக்கலாம்.

வீண்சண்டையே பாதிக்குப் பாதி நடக்கும் வலைப்பூவில் உங்கள் வலைப்பக்கத்தில் மாறுபட்ட தகவல்கள் இனிமை.

August 17, 2005 10:24 PM

enRenRum-anbudan.BALA said…
nalla pathivu, vAzththukkaL !

I was reminded of actor Senthil too :)

August 18, 2005 2:20 AM

நல்லடியார் said…
//அதியற்புதமான எழுத்துகளில் ஒரு அசிங்கமான அமெரிக்க அநியாயத்தைக் காட்டியிருக்கின்றீர்கள்//

ராகவன் சார்,

“அமெரிக்க அநியாயம்” அருமையான வார்த்தைப் பிரயோகம். பாதிப்பினால் எழுந்த வார்த்தையோ? :-)

August 19, 2005 6:43 AM

G8 நாடுகளின் ‘கரீபி ஹட்டாவ்’

ஜூலை முதல் வாரத்தில் ஸ்காட்லாந்தின் கிளனிகல்ஸ் நகரின் நடந்து முடிந்த கூட்டத்தில் G8 எனப்படும் உலகின் ஆகப்பெரிய 8 பணக்கார நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளின் வறுமையை ஒழிக்கப்போவதாக சூளுரைத்தன.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் கூட்டமைப்புதான் இந்த G8. உலகின் பெரும் பணக்கார இந்நாடுகளின் தலைவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கூடி உலக பொருளியல் தொடர்பான விஷயங்களை விவாதித்து சில பல அறிவிப்புகளை செய்வது வாடிக்கையாக நடப்பதுதான். வளர்ச்சி பெற்ற இந்நாடுகளின் திட்டங்கள் தத்தம் நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில் கொண்டு, உலகின் பிற நாடுகளை, முக்கியமாக ஏழை நாடுகளை பாதிப்புக்குள்ளாக்குவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதும் வாடிக்கைதான். இந்த G8 அமைப்பிற்கு தலைமைப் பதவி என்று எதுவும் இல்லாவிட்டாலும், வழக்கம்போல அமெரிக்க பெரியண்ணனின் நாட்டாமை இங்கு அதிகமாகவே இருக்கும் என்கிறார்கள்.

இந்த ஆண்டு ஆப்பிரிக்க நாடுகளுக்காக 50 பில்லியன் டாலருக்கு உதவித்திட்டங்களும், சில ஏழை ஆப்பிரிக்க நாடுகளின் கடன் தொகையை திரும்ப செலுத்தத் தேவையில்லை என்று ரத்து செய்துவிடுவதும் G8 தலைவர்கள் அறிவித்த திட்டங்களில் அடங்கும்.

நோக்கம் என்னவோ சிறப்பானதுதான். ஆனால், இந்த திட்டங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு பயனளிக்குமா என்பது பெரிய கேள்விக்குறி என பொருளியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முதலாவதாக, இவர்கள் அறிவித்திருக்கும் தொகை இந்த பணக்கார நாடுகளுக்கு சும்மா பாக்கெட் மணி மாதிரி. இந்த அறிவிப்பு, ஏழை நாடுகளின் பிரச்னைகளை இவர்கள் கண்டு கொள்வதே இல்லை எனும் குற்றச்சாட்டை சமாளிப்பதற்காக வெறும் கண்துடைப்பு மட்டுமே! இவான் டேவிஸ் என்னும் BBC-யின் Economics Editor இப்படி சொல்கிறார், ‘குறைந்த செலவில் தலைப்புச் செய்தியில் இடம் பிடிப்பதில் இவர்கள் வல்லுனர்கள்’. இருந்தாலும், இப்போது அறிவிக்கப் பட்டிருக்கும் தொகை தலைப்புச் செய்தியில் அல்ல, சாதாரண செய்தியாக வெளியிடக்கூட லாயக்கற்றது என்கிறார் அவர்.

இரண்டாவதாக, G8 என்ற பெயரில் இவர்கள் பாட்டுக்கு கூட்டாக திட்டங்களை அறிவித்து விட்டார்களே தவிர, அவற்றை நடைமுறைப் படுத்துவது அந்தந்த நாடுகளின் விருப்பத்தின்பாற்பட்டது. இதற்கு யாரும் யாரையும் நிர்ப்பந்தப்படுத்த முடியாது. கும்பகோண தீவிபத்தும் தமிழ்த்திரையுலக நடிகர்களின் உதவி அறிவிப்புகளும் இங்கு நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

ஆனால் நிலைமை அந்த அளவுக்கு மோசமாகி விடவில்லை. பஞ்சத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கும் நைஜர் போன்ற நாடுகளுக்கு உதவிப்பொருட்களுடன் விமானங்கள் வந்து இறங்கத்தொடங்கி விட்டன என்பது சற்று ஆறுதலான செய்தி.

வறுமையை ஒழிப்பதற்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களுள் ஒன்று, ஏழை ஆப்பிரிக்க நாடுகளின் கடன்களை ரத்து செய்வது. இந்தத் திட்டம் அந்த நாடுகளுக்கு ஒரு தற்காலிக நிவாரணமாக இருக்குமே தவிர, வறுமையை ஒழிக்க இது எப்படி உதவும் என்பது புரியவில்லை. ஒரு பழமொழி சொல்வார்களே, பசித்தவனுக்கு ஒருவேளை உணவளிப்பதை விட அவன் கையில் ஒரு தூண்டிலை கொடுத்து மீன்பிடிக்க கற்றுக்கொடுப்பது சிறந்தது என்று. அது போல இந்த நாடுகள் தனது பொருளாதார தேவைகளை தானே நிறைவேற்றிக் கொண்டு ஒரு தன்னிறைவு பெற்ற சமுதாயமாக நிமிர உதவும் வகையில் உதவித்திட்டங்களை வழங்குவதே ஒரு சிறந்த அணுகுமுறையாக இருக்கும் என்று தோன்றுகிறது. பணக்கார நாடுகள் சிந்திப்பார்களா?

தலைப்பிற்கு என்ன பொருள் என்று குழம்புபவர்களுக்கு: ‘கரீபி ஹட்டாவ்’ அதாவது ‘வறுமையை ஒழிப்போம்’ என்பது இந்திரா காந்தியின் மிக பிரபலமான ஒரு தேர்தல் கோஷம். கோஷம் பிரபலமான அளவிற்கு வறுமை ஒழிந்ததா என தெரியவில்லை.

பின்னூட்டங்கள்:

2 Comments:

Ramya Nageswaran said…

www.makepovertyhistory.org

எவ்வளது தூரம் இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ‘G-8 summitல் எடுத்த முடிவுகள் செயல்படுத்தப்படுகிறதா’ என்று உறுதி செய்யும் என்று தெரியவில்லை. ஆனால், பல பெரிய தலைகள் இந்த நிறுவனத்தோடு தங்களை இணைத்துக் கொண்டுள்ளார்கள்.

August 13, 2005 6:56 PM

சலாஹுத்தீன் said…

//எவ்வளது தூரம் இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ‘G-8 summitல் எடுத்த முடிவுகள் செயல்படுத்தப்படுகிறதா’ என்று உறுதி செய்யும் என்று தெரியவில்லை.//

உண்மைதான் ரம்யா, இந்த நிறுவனத்தின் வலைப்பக்கத்தில், இந்த ஆண்டு UK G8-ன் host ஆக இருப்பதை குறிப்பிட்டு இப்படி சொல்கிறார்கள் “They have the power and we can make them use it.”

இவர்களின் நம்பிக்கை வெல்லட்டும்!

August 14, 2005 12:59 PM